குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் சோனியா காந்தி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட எந்தப் பெயரையும் காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை என்ற போதும் வேற்றுமைகளை மறந்து நாட்டின் நலன் கருத வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், உள்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.இதனிடையே, தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தேவையான ஆதரவு இருப்பதாகவும் வெற்றிக்கு சாதகமான சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கு 20 ஆயிரத்துக்கும் சற்றே குறைந்த வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் போன்ற கூட்டணிக் கட்சிகள், தோழமைக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பாஜக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு சாதகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

^