சாதி அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கோஷமிட்டதாகக் கூறப்படும் இளைஞரின் தலை வெட்டப்பட்டதாக இணையதளத்தில் பரவும் காட்சிகள் உண்மையல்ல என்றும், அது குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் தேதி நரசிங்கபுரத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய அன்பழகன் என்ற நபர், சாதி அடிப்படையில் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான காணொலி இணையத்தில் பரவியது. இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அன்பழகனைத் தேடி வந்தனர்.இந்த நிலையில், அவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியது.“துண்டிக்கப்பட்ட தலை அன்பழகனுடையது அல்ல. குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதை வெளியிட்டவர் மீதும், அதைத் தொடர்ந்து பரப்புவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.