என்னை கொலை செய்ய வேண்டும் என நோக்குடன் சிலர் உத்தரவிட்டுள்ளனர் என மிளகாய்பொடி வீச்சு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதிய உணவிற்காக, நேற்று, தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு, வெளியே வந்தார். அப்போது, பார்வையாளர்கள் பகுதியில் நின்ற நபர், திடீரென, கெஜ்ரிவால் மீது, மிளகாய் பொடியை வீசி, தாக்குதல் நடத்தினான். இதில், கெஜ்ரிவால் நிலைகுலைந்து போனார். மிளகாய் பொடி வீசியவனை, போலீசார் உடனடியாக கைது செய்தனர். இது குறித்து இன்று பேட்டியளித்த கெஜ்ரிவால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்று 4 முறை என்மீது தாக்குதல் நடந்துள்ளது. மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் முதன்முறையாக எனது கட்சி போட்டியிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் சிலர் என்னை கொல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் உத்தரவிட்டுள்ளனர். எனது ஒவ்வொரு மூச்சும், உடலில் இருக்கும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காகவே என்றார்.