செந்தில்பாலாஜி விவகாரம்; வாதங்களை அடுக்கிய மூத்த வழக்கறிஞர் கபில்சிபல்.. அடுத்தது என்ன?

செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து மூன்றாம் நீதிபதி நியமிக்கப்பட்டார்.  வழக்கு விசாரணைக்கு வந்தபோது செந்தில்பாலாஜி தரப்பினர் வாதங்களை முன் வைத்தனர். சோதனையின் போதே நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி அலறி துடித்தார். திடீரென செந்தில் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது. இதற்கிடையில் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி அவரது மனைவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு எதிராகவும் அமலாக்கத்துறை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதன் காரணமாக மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவர் முன் கடந்த ஏழாம் தேதி வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டது. அப்போது அவர் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்பேரில் இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையும் நடைபெற்றது. அதில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தரப்பினர் தனது வாதத்தைமுன் வைத்தனர். அப்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் காணொளி காட்சி வாயிலாக தனது வாதத்தை முன் வைத்தார். அதில் “குற்றம் செய்ததால் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ ஆதாரம் இல்லை. குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை” என தனது வாதத்தை முன் வைத்தார். மேலும், சட்டவிரோதமாக பணப்பறிமாற்ற தடை சட்டத்தின் 19 ஆவது பிரிவின் படி துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் கைது நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். ஆனால் ஆதாரங்களை கொடுக்கவில்லை. அதேபோல் கைதுக்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்” என்றும் செந்தில்பாலாஜி தரப்பினர் வாதிட்டனர். இந்த சூழலில் ‘மூன்றாவது நீதிபதி அமைக்கப்பட்டதற்கு எதிராகவோ, ஏழாம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஏதேனும் மாற்றங்களை கூறியோ அல்லது அதற்கு எதிராகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களைக் காட்டியோ ‘வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என்று செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடலாம். அவ்வாறு நாடினால் , நீதிமன்றமும் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அதை பரிசீலிப்பதற்கான வாய்ப்பு உண்டு’ என சொல்லப்பட்டு வந்தது. இவற்றை கருத்தில்கொண்டு, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் அப்படி பரிசீலனை வந்தாலும் தங்கள் தரப்பு கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அம்மனுவில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

^