மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகக் கடைப்பிடிக்கும் ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிரப் பிற மாவட்டங்களில் 50 விழுக்காடு இருக்கைகளில் பயணிகளுடன் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நோய்த் தொற்றுப் பாதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளன.அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள் இரண்டாம் வகையில் உள்ளன.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மூன்றாம் வகையில் உள்ளன. முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் கூடுதலாக எந்தத் தளர்வும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

^