தமிழ் புத்தாண்டு ராசிபலன்

கும்பம்

பொறுப்புடன் பணியாற்றும் கும்ப ராசி அன்பர்களே!

குரு, உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமானதல்ல என்றாலும், அவரது 9-ம் இடத்து பார்வையால் நன்மை ஏற்படும். ஆற்றல் மிக்கவராகத் திகழ்வீர்கள். ஜூலை 5ல் ஏழாம் இடமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு ஏணியாக வளர்ச்சிக்கு உதவப் போகிறார். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை நல்ல முறையில் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். டிச. 20ல் குரு அதிசாரமாக(முன்னோக்கி) கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன்பின், வருமானத்தில் தடை, வீண் விரோதம் ஏற்படலாம். ராகு தற்போது 8-ம் இடமான கன்னியில் இருக்கிறார். அவரால் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கேது 2-ம் இடத்தில் இருப்பதால் பகைவர் வகையில் தொல்லை உருவாகலாம். 2016 ஜன. 8ல் ராகு சிம்மத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். அவரால் அலைச்சல் அதிகரிக்கும். தற்போது சனி பகவான் ராசிக்கு 10-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் தொழிலில் பின்னடைவு, ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம் என்றாலும், செப்.5 வரை வக்கிரமாக இருப்பதால், அவரால் கெடுபலன் உண்டாகாது. மாறாக நன்மையே அளிப்பார். டிசம்பர் வரை, உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வருமானம் இருந்தாலும், செலவும் கட்டுக்கடங்காமல் போகும். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.

பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், குருவின் பார்வை பலத்தால் உழைப்பிற்கேற்ப வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் யாரையும் நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலையும் உருவாகலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைஞர்கள் முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ஆனால், எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். விவசாயத்தில் அதிக முதலீடு பிடிக்கும் தானியத்தை பயிர் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே இருக்கும். பெண்கள் ஆடம்பர செலவைக் குறைப்பது நன்மையளிக்கும். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
ஜூலை 5 க்கு பிறகு பிரச்னை அனைத்தும் மறையும். சமூகத்தில் மதிப்பு சிறப்படையும். பொருளாதார வளம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆற்றல் மேம்படும். புதிதாக வீடு. மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். தடைபட்டு வந்த திருமணம் சிறப்பாக நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர் திறமைக்கேற்ப அங்கீகாரம் பெறுவர். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பின் தங்கிய நிலை மறையும். விரிவாக்க முயற்சியும் வெற்றி பெறும். 2016 ஜனவரி முதல், வாழ்வில் ஆடம்பர வசதி பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவர். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.

வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரித்தாலும் லாபத்திற்கு குறைவில்லை. அரசு வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணி ரீதியாக, சிலர் வெளியூரில் தங்க நேரிடலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள், சமூகசேவகர்கள் பிரதிபலன் பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் முயற்சியுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர்.

பெண்கள் வாழ்வில் நல்ல மகிழ்ச்சி பெறுவர். உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்வர். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமையளிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானை வணங்கி வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சிவனை வழிபட்டால் தடைகள் நீங்கி முன்னேற்றம் பெறலாம். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

^