பொன்னமராவதி சர்ச்சை ஆடியோவை வெளியிட்டவர்களின் தகவல் கோரி அமெரிக்காவின், கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதுக்கோட்டை காவல்துறை கடிதம் எழுதி உள்ளது. ஒரு சமூகத்தினரின் பெண்கள் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது.அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் போராட்டம் வெடித்தது. மேலும், பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவுவதை தடுக்க, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மதுப்பான கடைக்ள் மூடப்பட்டன. மேலும், புதுக்கோட்டையில் பேருந்துகள் 80 சதவீதம் இயக்கப்படவில்லை. பிரச்னை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், மோதலுக்கு காரணமான சர்ச்சைக்குரிய வாட்ஸ் அப் வெளியிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இது குறித்த முழுமையான விசாரணைக்காக, அமெரிக்காவின், கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதுக்கோட்டை காவல்துறை கடிதம் எழுதி உள்ளது. இதில், கிடைக்கும் தகவலின் படி, நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
Posted Date : 21-Apr-2019
Last updated : 21-Apr-2019
பொன்னமராவதி சர்ச்சை ஆடியோ… வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்