இங்கிலாந்தில் 80 மில்லியன் கணக்கில் வரிஏய்ப்பு செய்த மோசடி கும்பல்...அல்கொய்தாவுக்கு நிதி உதவி செய்ததாக தகவல்

இங்கிலாந்தில் வரிஏய்ப்பு செய்து அல்கொய்தாவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் அரசு ஏஜென்சிகளில் ஊடுருவியும் ஒரு மோசடி கும்பல் வரிஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளிடம் பிரிட்டன் மக்களின் வரிப்பணம் கைமாற்றப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து செயல்படும் இந்த மோசடி கும்பல் தங்கள் வரிஏய்ப்பு தொகையிலிருந்து 1 சதவிகிதத்தை தீவிரவாத இயக்கங்களுக்கு நன்கொடையாக அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இங்கிலாந்து வருவாய்துறையை ஏமாற்றியும் கிரெடிட் கார்டு, வங்கி மற்றும் தனிநபர் மோசடி மூலமும் கடந்த 20 ஆண்டுகளில் 80மில்லியன் பவுண்ட் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் ஒரு பகுதி பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு முன்பு அந்த மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி கும்பல் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஆசிய வம்சாவளியினர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி கும்பல் இதுவரை செய்த குற்றங்களுக்கும், பணமோசடிக்கும் 100 வருடங்களுக்கும் மேல் அவர்கள் தண்டனை அனுபவிக்க நேரிடும் என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான விசாரணையில், பல அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மோசடி கும்பல் குறித்த முழு விவரங்களை தெரியும் வரையில் அவர்களை பற்றி வெளியிட இங்கிலாந்தின் கிரீன் பிராசஸ் சர்வீசஸ் (சிபிஎஸ்) என்ற அமைப்பு மறுத்து வருகிறது. இந்த அமைப்பு இதுவரை சேகரித்த தகவலின்படி, தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் தொழிலாளர்களை பயன்படுத்தி மோசடி பொருட்கள் விற்பனை, கார் விபத்து மோசடி மற்றும் அடமானம், கிரெடிட் கார்டு மோசடிகளை செய்துள்ளனர். மேலும், தவறான பதிவுகளை உருவாக்க தேசிய காப்பீட்டு எண்களைக் திருடி அதனை மாற்றி தனது தொழிலுக்கு பயன்படுத்துவதும், பண மோசடி செய்ய சட்டவிரோதமாக தொழிலாளர்களை குடியேற்றம் செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

^