ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணைய விசாரணைக்கு தங்கள் மருத்துவமனை மருத்தவர்கள் ஆஜராக விளக்கு அளிக்க கோரியும், ஆணைய விசாரணைக்கு தடை கோரியும் அப்பலோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில், கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஆணையத்தின் தரப்பு வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே ஆறுமுகசாமி ஆணைய தரப்பு முன்வைத்த வாதங்களுக்கு பதில் வாதங்களை அப்பலோ மருத்துவமனை தரப்பு எடுத்துவைத்தது. சுதந்திர இந்தியாவில், அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய சிகிச்சை போதுமானதா என விசாரிப்பது இதுதான் முதல் முறை என அப்பலோ மருத்துவமனை தரப்பு குறிப்பிட்டது. அப்பலோ மருத்துவமனை தவறான சிகிச்சை வழங்கியதாக ஆணைய வழக்கறிஞர் எப்படி கூற முடியும்? என்றும், இதற்கு ஆணையம் அமைதி காத்தது ஏன்? என்றும் அப்பலோ தரப்பில் ஆவேசமாக கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய, ஆணையம் ரகசியமாக மருத்துவ குழுவை நியமித்தது என்றும் அப்பலோ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

^