தமிழகத்தில் காங்கிரஸ் நிற்கும் 10 தொகுதிகள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லிக்கு சென்றனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டில் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று பிற்பகல் சென்னை வந்தார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி உள்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார். ஆனால் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஈரோடு, சிவகங்கை, தேனி, ஆரணி. சேலம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், .விருதுநகர், ராமநாதபுரம் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

^