சிலைகடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி

சிலை கடத்தல் வழக்குகளை கையாளும் மாநில அரசின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதித்துறை நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல், தமக்கு அலுவலகம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் இருப்பதாகவும் கடந்த விசாரணையின் போது புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து, மனுவாக அவர் தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தமக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை என பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தை பூட்டி சாவியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் சிறப்பு அதிகாரி ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், ஓய்வு பெற்ற பிறகு தம்மை சந்தித்த ஆய்வாளர் சாவியை கேட்டதால், அதை ஒப்படைத்ததாகவும் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளை, தங்கள் பிரிவுக்கு திரும்பும்படி சிறப்பு அதிகாரி அறிவுறுத்தி இருப்பதாகவும், அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஓய்வு பெற்ற டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, டிஜிபி தற்போது பணி நீட்டிப்பில் இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை மாநில அரசு கையாளும் விதம் முறையாக இல்லை எனவும், தேவைப்பட்டால் இந்த வழக்கில் நீதித்துறை அவசரநிலை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

^